[font="]1.பொம்மைகள் குவித்திருக்கும் அறை பொம்மைகள் குவித்திருக்கும் அறைக்குள் அனுமதியின்றி நுழைகிறது மெளனம். ஒவ்வொரு பொம்மையிடமும் ஏதோவொன்றை தேடுகிறது. அறையின் மூலையில் அமர்ந்து சிறிதுநேரம் விசும்புகிறது. பின், பெண்ணாகி வெளியேறுகிறது. மரித்த குழந்தையின் பொம்மைகளை வேறெப்படி அணுகுவாள் அவள்? 2.கல்பொம்மைகள் என் தனிமைக்குள் வந்துவிழுந்த கற்களை பத்திரப்படுத்தியிருக்கிறேன். அவை வெவ்வேறு நிறத்திலும் அளவிலும் இருக்கின்றன. ஒவ்வொரு கற்களிலும் எறிந்தவரின் பெயரை வெகு சிரத்தையுடன் எழுதுகிறேன். நீ எறிந்த கற்களில் மட்டும் சிறு சிறு பொம்மைகள் வடித்திருக்கிறேன். ப்ரியங்களால் நிறைந்திருக்கும் பொம்மைகளில் உன் பிரிவு நாளை குறித்துவிட்டு தனிமைக்குள் நுழைந்து கதவடைத்துக்கொள்கிறேன். என் தனிமையுடன் உரையாடிக்கொண்டே இருக்கின்றன கல்பொம்மைகள். - நிலாரசிகன்.[/font]