மீனு – சிறுகதை
மீனுவின் அப்பா அன்றிரவு அவள் விரும்பிய கரடி பொம்மையை வாங்கி வந்திருந்தார். மீனு அப்பாவை கட்டிக்கொண்டு முத்தம் பொழிந்தாள்.
அடுக்களையிலிருந்து வெளிவந்த அம்மாவுக்கு மீனுவின் சந்தோஷம் மனதை பிசைந்தது. கரடி பொம்மையின் புசுபுசுவென்ற அடர்கருமைநிற முடியை
மீனு வாஞ்சையுடன் தடவிக்கொடுத்தாள். மிருதுவான அதன் தலையில் முத்திட்டு மகிழ்ந்தாள். அப்பாவும் அம்மாவும் கண்கள் தளும்ப மீனுவை ரசித்துக்கொண்டிருந்தபோது மீனு கரடி பொம்மையை நெஞ்சோடு அணைத்துக்கொண்டு தன் அறைக்குள் நுழைந்தாள்.
ஆறு வருடங்களுக்கு முன் மீனு பிறந்தபோது அப்பாவை விட அம்மாதான் அதிகம் சந்தோஷப்பட்டாள். போரில் காலை இழந்ததால் மகன் பிறப்பான் தன்னை விட சிறந்த வீரனாக வலம் வருவான் என்று அம்மாவிடம் அடிக்கடி சொல்லிக்கொண்டிருப்பார் அப்பா. பிறந்தது மகள் என்றபோது வெளிப்பட்ட ஏமாற்றத்தை மறைத்துக்கொண்டு மகளை ஆண்பிள்ளை போல் வளர்க்க வேண்டும் என்றே நினைத்திருந்த அப்பாவின் எண்ணத்தில் பேரிடியாய் அந்த செய்தி வந்து விழுந்தது. காது கேளாத வாய்பேசமுடியாத குழந்தையாக மீனு பிறந்திருந்தாள்.தவமிருந்து பெற்ற பிள்ளையின் நிலையை கண்டு இறைவன் மீது வெறுப்பை உமிழ்ந்தார் அப்பா. துடிதுடித்து போனாள் அம்மா. ஏதோவொரு நம்பிக்கையில் நகர்ந்தன நாட்கள்.
மீனுவின் உலகில் பொம்மைகள் மட்டுமே நிறைந்திருந்தன. நாய்க்குட்டிகளும்,சிங்கங்களும், யானை பொம்மைகளும் மட்டுமே மீனுவின் மொழியை புரிந்துகொண்டன. எப்போதும் பொம்மைகள் சூழ தன் படுக்கையில் அமர்ந்திருப்பாள் மீனு. கண்களால் பொம்மைகளுடன் அவள் பேசுவதை வேதனையுடன் பார்த்துவிட்டு நகர்வாள் அம்மா. படிப்பில் எல்லோரும் ஆச்சர்யமூட்டும் வகையில் கூர்மை மிக்கவளாக திகழ்ந்தாள் மீனு. அம்மா கற்று கொடுக்கும் பாடங்களை உடனே புரிந்துகொள்வாள். அப்பா வாங்கி தந்திருக்கும் கரடி பொம்மையை இடது தோளில் சாய்த்தணைத்தபடியே வீட்டுக்குள் நடமாடுவாள்.
ஒலிகளை கேட்டறியாத மீனுவின் செவிகள் அந்த துயர்மிகுந்த இரவிலும் பெருத்த ஓசையுடன் விழுந்து வெடித்த வெடிகுண்டின் ஓசையை கேட்டுணர்ந்து கொள்ளவில்லை. இரத்தம் தோய்ந்த உடையுடன் அவளது அறைக்குள் வந்து விழுந்த அம்மாவின் கைகள் ஆழ்ந்த உறக்கத்தில் கனவுலகில் பொம்மைகளுடன் விளையாடிக்கொண்டிருந்த மீனுவை தட்டியெழுப்பியபோது திடுக்கிட்டு எழுந்தாள். அம்மாவைக் கண்டவுடன் பயத்தில் கண்கள் மருள கரடி பொம்மையை கட்டிக்கொண்டவளின் காலடியில் விழுந்து மரணித்தாள் அம்மா.
அநாதை என்னும் வக்கிர சொல் மீனுவின் செவிகளில் நுழைய முடியாமல் காற்றில் அலைந்து திரிந்தது.முள்வேலிக்குள் தனக்கு மிகவும் பிடித்தமான கரடி பொம்மையை அணைத்தபடி வெளீர் மஞ்சள் நிற
கவுனில் உணவுக்காக தட்டை ஏந்தி நின்றுகொண்டிருந்தாள் மீனு.கண்களின் நிற்காமல் வழிந்துகொண்டிருந்த கண்ணீர் அவளது பிஞ்சு மனதின் வலிகளை மொழிந்துகொண்டிருந்தது. நேற்றுவரை உணவூட்டிய அம்மாவின் நினைவுகள் அவளது கன்னத்தில் கண்ணீர்க்கோடுகளை வரைந்து உதிர்ந்தன. சக மனிதனின் மரணத்துயரின் ஓலமும்,உறவுகளின் பிரிதலினால் ஏற்பட்ட துயரமும் மீனுவின் செவிகளால் உணரமுடியவில்லை எனினும் அவளது இதயம் அந்த வலியை உணர்ந்துகொண்டது.
பகலெல்லாம் வெய்யிலின் உக்கிரமும்,இரவின் கடுங்குளிரும் இப்போது மீனுவுக்கு பழகி இருந்தன. சுற்றிலும் முள்வேலியிட்ட உடைந்த கட்டிடமொன்றில் மீனுவும் இன்னும் பலரும் தங்க வைக்கப்பட்டிருந்தனர்.
அவர்களது பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டிருந்த ராணுவ வீரர்களில் ஒருவன் மிகவும் மூர்க்கமானவனாக தோன்றினான். இரக்கமற்ற அவனது கண்களை பயத்துடன் பார்ப்பாள் மீனு. அவனது தோற்றமும் கன்னத்திலிருக்கும் வெட்டுத்தழும்பும் அவனை கதைகளில் வரும் பூச்சாண்டியை நினைவூட்டின.அங்கிருந்த மக்களும் அவன் அருகில் செல்லவே பயந்தனர். எப்போதும் யாரையாவது மிரட்டிக்கொண்டே இருப்பது அவன் வழக்கம். மீனுவின் அருகில் வந்தவன் அவளது பொம்மையை பறித்துக்கொண்டு சத்தமிட்டு சிரித்தபோது அருகிலிருந்த கல்தூணுக்கு பின் ஒண்டிக்கொண்டாள்.
மறு நாள் அதிகாலை சிறுநீர் கழிக்க பின் பக்கம் சென்றவள் இரு பாதியாய் முள்வேலியோரம் கிடந்த பொம்மையை கண்டு அழுதுகொண்டே அந்த பிய்ந்த பொம்மையை அள்ளி எடுத்துக்கொண்டு தன்னுடைய பாயில் வந்து உட்கார்ந்தாள். அப்படியே உறங்கியவளின் கனவில் கரடிபொம்மைகள் உயிர்ப்பெற்று அவளோடு ஓடியாடி விளையாடின.
செஞ்சிலுவை சங்கம் தருகின்ற ரொட்டிகளை வாங்க நீண்ட வரிசை நின்று கொண்டிருந்தது. அந்த முரட்டு ராணுவ வீரன் வரிசையை ஒழுங்கு படுத்திக்கொண்டிருந்தான். எல்லோரும் வாங்கி சென்றபின் கடைசி ஆளாக மீனு ரொட்டியை வாங்கினாள். வெய்யிலின் உக்கிரம் தாங்க முடியாமல் ராணுவ வீரன் அருகிலிருந்த படிக்கட்டில் உட்கார்ந்தான்.தொடர்ச்சியான வேலைப்பளு அவனை அழுத்தியதால் சோர்வுற்றிருந்தான்.சோர்வாக அவன் அமர்ந்திருப்பதை கண்ட மீனு
இரண்டு துண்டில் ஒன்றை தனக்கு வைத்துக்கொண்டு மற்றொன்றை அந்த முரட்டு ராணுவ வீரனுக்கு கொடுக்க கைகள் நீட்டினாள். தன்னை நோக்கி நீள்கின்ற பிஞ்சுவிரல்களும் அதன் வெள்ளை மனதும் கண்டவன் முதல் முறையாக மெல்லியதாய் தன்னுடல் நடுங்குவதை உணர்ந்தான். அவனிடம் ரொட்டியை கொடுத்துவிட்டு தன் ரொட்டித்துண்டை கடித்தபடி இடது கையில் பிய்ந்த கரடி பொம்மையை அணைத்தபடி நடந்து சென்றுகொண்டிருந்தாள் மீனு.
-நிலாரசிகன்.
|