என்புருகி உன்னை அழைக்கும் பிள்ளைமுன் அன்பால் நீதோன்றும் அந்நாளும் எந்நாளோ? இன்பப்பெருக்கே இறையே அடியவன் எனது துன்பம் தீர்க்கும் அந்நாளும் எந்நாளோ? விடை ஏறினாய் மறைதேடும் விடையுமானாய் சடையப்பனே உன்னை காணும்நாள் எந்நாளோ? பித்தா அடியவர்க்கு பிரியமான பெருமானே அத்தா உனைக்காணும் அந்நாளும் எந்நாளோ? கருவறைச் சிறையொழித்து கனகசபை சேர்க்கின்ற குருமொழியை கேட்கும் அந்நாளும் எந்நாளோ? காயத்தின் மீதுள்ள காமம் கட்டறுந்து நாயன் கடைத்தேறும் நன்னாள் எந்நாளோ? மும்மலம் நீங்கி முழுவது முனதாகி சும்மா இருக்கும்நாள் சிவனே எந்நாளோ? தணியாத சம்சார வெந்தழல் தணித்திடும் இணையடி நான்காணும் அந்நாளும் எந்நாளோ? வஞ்சனை பொய்யென்று மண்டிய அழுக்கெலாம் நெஞ்சினின்று நீங்கும் அந்நாளும் எந்நாளோ? கன்றினுக்குச் சேதா கனிந்திரங்கல் போலநீ என்றனுக்கு இரங்கும் அந்நாளும் எந்நாளோ? வெங்கடேஷ் ராதாகிருஷ்ணன்
அருமை வெங்கடேஷ்! வாழ்த்துக்கள்! உன் புகழ் பாடும் அடியாரில், அடியேன் நிச்சயம் இல்லை தான்! உன் அருள் பெறவே இப்பாரில், முயற்சிப்பவனும் இல்லை நான்! எனக்குத் தெரிந்த சொற்களிலே சிறந்தவை சில தேர்ந்தெடுத்தே என் ஐயா! உமையொரு பாகத்தே கொண்டவரே! சொல்வேன், கேட்பீரே! விழியிரண்டும், அகவிழியும் மூடி, இருப்பதை அறியாமல் தினம் வாடி, நீ இருக்கும் இடமதுவும் நாடி, வந்திடுவார்; அழுவார் பல கோடி! உமை நாடாமல் இருப்பதையே தான் தன் கொள்கை என்பார் சில கோடி! இருவருக்கும் பொதுவாய் இருப்பது தான் உன் தன்மை என்றுணர்வார் உனை நாடி தனை உண்மையிலே பணிந்தாருந் தான்! தந்தையென எங்கும் இருப்பவர் நீர் எங்களையும் இசைவாய் ஏற்றவர் தான்! தங்களுக்கே இசைந்தே பணிவேனே!