கல்லூரியில் தமிழை மொழிப்பாடமாகப் படித்ததாலும், ஆங்கிலக் கவிதைகள் எழுத முற்பட்டதாலும் நான் என் கல்லூரி நாட்களில் யாப்பிலக்கணம் படித்து ஒரு பாடல் புனைந்தது இன்றும் நினைவில் நிற்கிறது. அது மனிதன் நிலவில் காலடி எடுத்துவைத்த நிகழ்வு குறித்தது: அடிகளால் மூன்றளந்த அஞ்சிறைக் கண்ணன் அடிகளால் மூன்றளந்த ஆன்றோர் வியப்ப அடிகளால் மானுடர் அந்நிலா ஆய்ந்ததை அடிகளால் ஏறுர வாக்கலென் பதந்த அடிகட்கும் அரிதே தெளி. மேலும் பல அடிகள் எழுத முயன்று அது என் பொறுமையை சோதிக்க ’இது நமக்கு ஒத்து வராது’ என்று ஒதுங்கிவிட்டது, இப்போது பிடித்துக் கொள்கிறது! முதலில் என் முதல் கதை ’அவன் அவள்...’ தட்டெழுதும்போது ’உனக்கு என்னதான் பிடிக்கும்?’ என்ற வரியில் உதித்த ஒரு கடிக்கவிதை: 01. என்னதான் பிடிக்கும்? உனக்கு என்னதான் பிடிக்கும் என்றேன். கோபித்துக்கொண்டாள். உனக்கு என்னத்தான் பிடிக்கும் என்று சொன்னேன் என்றேன். ஸ்மார்ட் என்று நினைப்போ என்றாள். தொடர்ந்து, எனக்கும் என்னத்தான் பிடிக்கும் என்றாள். இப்போது என் முகம் சுருங்கியதைப் பார்த்து, எனக்கும் என்னத்தானைப் பிடிக்கும் என்று சொன்னேன் என்றாள்! ***** இதோ இன்னொரு கடிக்கவிதை: ’மண்டபத்தில் எழுதிக்கொடுத்த ஒரு நகைச்சுவத் துணுக்குடன்’ இரண்டு வரிகள் சேர்த்துச் சொன்னது: 02. சங்கேத மொழி ஹலோ யார் பேசறது? நான்தான் பேசறேன் நீங்க? இங்கேயும் நான்தான் பேசறேன். படிப்பதற்கு உளறல்போல் இருந்தாலும் அது அவர்கள் காதல் சங்கேதமொழி! ***** என் (கடிக்)கவிதைகளை எண்ணிடத் தொடங்கிவிட்டேன்! 03. கவிதையை/கழுதையைக் கட்டிப்போடு! புதுக்கவிதை எழுத முனந்து அது புதுக் கழுதையாகி உதைத்துக்கொண்டு மனம்போல் திரிந்து, என் மின்வலைக் காகிதங்களைக் கபளீகரம் செய்வதுகண்டு அதை அசைச் சீர்தளைகளால் கட்டிப்போட்டேன்: உதைத்தது கடித்துவிட்டாலோ அல்லது ஓடிவிட்டாலோ எனக்கல்லவோ அவதி! இந்தக் கவிதையை இப்படிக் கட்டினேன்: புதுக் கவிதை எழுத முனைந்தது புதுக் கழுதை யாகி உதைவிட்டு மனம் போலத் திரிந்து எனது மின்வலைத் தாள்களை விழுங்குவது கண்டதை அசைச்சீர் தளைகள் கொண்டு நன்கு கட்டிப் போட்டு விட்டேன் இன்று. உதைத்தது என்னைக் கடித்து விட்டாலோ அல்லது கழுதை ஓடிவிட் டாலோ அவதி யுறுவது அடியேன் அல்லவோ! --நம்பினால் நம்புங்கள், இது ஆசிரியப்பா! *****
04. வாழ்வில் வசந்தம் (இணைக்குறள் ஆசிரியப்பாவால் ஆன புதுக்கவிதை) வார்த்தைகள் பலூனாக விஸ்வரூபம் எடுத்தால்*அதை மௌனம் என்ற ஊசியால் உடைத்து விடலாம். மௌனங்கள் சுமையாக இறுகினால் அதையொரு புன்னகையால் அவிழ்த்துவிடலாம். வெறும் புன்னகைகள் அலுத்துவிட்டால் கண்களில் நீர்வரச் சிரிக்கலாம். மனதில் புன்னகை இயல்பாக மிளிர வார்த்தைகளில் மலர்களாய்ச் சிரித்து மௌனத்தில் இலைகளாய்த் தழைத்து கண்ணீரால் வேரூட்டி வானுயரக் கிளைத்து வளர்த்த வாழ்க்கை என்ற மரத்தில் அமுதாய் விளைந்த கனிகளை அணில்கள் குதறியும் வண்ணப் பறவைகள் வளவளத்தும் கானம் இசைத்தும் உண்டு பசியாறி தன் வம்சம் பேணி வாழும் வாழ்க்கையில் வசந்தம் பொய்க்குமோ? *****
05. சினிமாவும் டீ.வீ.-யும் சினிமா பார்ப்பது எதற்காக? பொழுது போக்க. பொழுது போக்கக் காசு செலவா? ஓய்வுக் காக. ஓய்வுக் காக காசு செலவா? ’சைட்’ அடிக்க. அதற்குக் கோவில் ’பெட்டர்’ அல்லவா? உள்மன ஆசைகளை, அதமங்களை மாயையில் முயன்று பார்க்க---திருப்தியா? இதுவே சரியான பதிலா காதோ? ஆசைகள் எல்லாம் குறந்த செலவில் மனத்தில் நிகழ இருக்கே டீ.வீ.! *****
06. சஹதர்மிணீ! ரமணி லலாடம் நடுவில் திலகம் மிளிர, சீமந்த ரேகையில் குங்குமம் துளிர்க்க. சஞ்சரிக்கும் சஹதர்மிணீ! உனக்கு மனதில் அடுப்படி, அலுவலகம், ஆன்மீகம், அக்கம்பக்கம் எல்லாமே சமபாவம்! பற்றற்ற ஈடுபாடு! நண்பர்கள் உண்டு, நண்பர்கள் இல்லை; உறவினர் உண்டு, உறவினர் இல்லை. பொழுது போகும், பொழுது போதாது, எப்படி உனக்கிது சாத்தியம் ஆகிறது? நானோ எனது செயல்கள் அனைத்திலும் எடுப்பார் கைப்பிள்ளை! சித்தம் சிவன்போக்கு! நீயும் நானும் வாழ்வில் இணைந்து கருத்தொரு மித்து, கருத்து வேறுபட்டு, நீஎன் சொல்கேட்டு நானுன் சொல்கேட்டு, மதுரை சிதம்பரம் ஒன்றாக இணைந்து, குறைகளைக் குறைத்து நிறைகளை நேசித்து வாழ்வது கற்றோம், வருடங்கள் ஓட்டத்தில்! இனிவரும் வாழ்வில் வம்சம் வளர, கண்போல் வளர்த்த ஒரேமக னுக்கு வதுவை தேடி விவாஹம் செய்வித்து தாத்தா பாட்டி உறவுகள் ஆகி பேரன் பேத்திகள் பேணி வளர்த்து, புத்திரன் வதுவின் தாம்பத்யம் சிறக்க, வாழக் கற்போம் கனவுகள் தவிர்த்து! நீயின்றி நானும் நானின்றி நீயும் வாழ்வது ஒருநாள் வந்தே தீரும் என்பதை அறிந்து ஞானம் பெற்று அந்த நாளில் சுமையாக இல்லாமல் இருக்க நம்மைத் தேற்றிக் கொள்ள உடல்நலம் பேணி, மனநலம் காத்து வாழும் வகையைக் கவனித்து நடக்க பகவான் நமக்கு அருள்வா னாக! [லலாடம்=நெற்றி, சீமந்த ரேகை=வகிடு, சஹதர்மிணீ=இல்லறத்தில் பங்குகொள்ளும் மனைவி, புத்திரன்=மகன், வது=மருமகள்] *****
07. ஹைகூ, சென்ரியூ முயற்சிகள் ஹைகூ, சென்ரியூ என்ற, ஜப்பானிலிருந்து வந்த கவிதைகளுக்கு வடிவங்கள் ஒன்றே. இரண்டும் மூன்றடியில் வருவன: முதலடியில் ஐந்து, இரண்டாம் அடியில் ஏழு, மூன்றாம் அடியில் ஐந்து சீர்கள் இருக்கவேண்டும். மூன்றாம் அடியில் உள்ள ட்விஸ்ட்--திருகு, வியப்பளிப்பதாகவும், முன்னிரு வரிகளுடன் சம்பந்தம் உடையதாகவும் இருக்கவேண்டும். ஒரு வித்தியாசம், ஹைகூ பொதுவாக இயற்கையையும் விழுமிய பொருளையும் சொல்வது; சென்ரியூ மனித இயல்பைப் பற்றி. கற்சிலையில் கடவுள்? எத்தனை மூட நம்பிக்கை! ஐகான் எங்கள் வழி. மழைத்துளிகள் இணையும் வயர்களில் அத்வைதம்! மிச்சம் வேலைக்காரிக்கு. நீயே நான் நானே நீ என்ற தோழா! பில்பணம்! பர்ஸை மறந்துவிட்டேன்! கழுதைகள் கடன்பணம் வராததால் கழுதைகள் பறிமுதல்: பேங்க் பதிவுகள் காலி! வரும்நாள் எல்லாம் இன்று நேற்று ஆவது விதி. கனவுகளில் வாழ்க்கை. மனைவியின் மாக்கோலம் காக்கைகள் அணில்கள் மேயும். எறும்புக்குத் தடங்கள். *****
Yella style le yum kalakkareenga, Saidevo...thodarattum! Many tamizh words added to my vocabulary! Sriniketan
08. கணினி போற்றுதும்!? ரமணி, 18 aug 2012 கணினி போற்றுதும் கணினி போற்றுதும்! பணியெது வாகிலும் பாங்குறச் செய்திடும் கணினி போற்றுதும் கணினி போற்றுதும்! பலவகை வடிவினில் உலகில் உறைந்திடும் பலவகை மனிதரும் பலவாறு உகந்திடும் கணினி போற்றுதும் கணினி போற்றுதும்! இன்றைய உலகின் எலிகள் போட்டியில் பகலும் இரவும் மனிதர் வாழ்வினை நிலைபெறச் செய்திடும் கணினி போற்றுதும்! குழந்தை மனம்முதல் கிழவர் மனம்வரை கலைகள் போற்றித் திறன்கள் வளர்த்து கனவுகள் தந்திடும் கணிணி போற்றுதும்! குடும்பம் முழுவதும் கணினி வகைகள்! மேசைக் கணினியும் மடிமேல் கணினியும் அலுவ லகத்திலும் வீட்டிலும் அமர்ந்து ஆசான் தோழன் மருத்துவன் செயலர் கணக்கன் தூதுவன் கேளிக்கை யாளன் அனைவர் ’ரோல்’களில் ஆடிடும் பாடிடும்! கைத்தொலை பேசியில் வன்பொருள் மென்பொருள் இணைபொரு ளாக உறையும் கணினி நின்ற விடத்தில் தொடர்பு கொண்டு உறவினை தொழிலினை வம்பினை வளர்த்திட ஏழை எளியோர் செல்வம் படைத்தோர் யாவரும் முனைந்திட வழிவகை செய்திடும். உட்பகை வெளிப்பகை வானிலை பொருளியல் விதிமுறை செயல்வகை என்றிவ் வாறு அனைத்தும் அறிந்திட அரசுக் குதவி அரசுகள் அமைக்கும், அரசுகள் கவிழ்க்கும்! இறைவ னுக்குக் கரங்கள் பலவாம் கணினி களுக்கும் கரங்கள் பலவே! விரல்கள் சொடுக்கிட மின்னெலி ஒருகரம் விரல்கள் தட்டிட விசைமணை ஒருகரம் கண்கள் பார்த்திட ஒளிர்ந்திடும் திரைமுகம் பிரதிகள் அச்சிட அச்சுப் பொறிக்கரம் அச்சின் தாள்களை அலகிட்டு மின்பதியும். இணைய தளங்களை எட்டிட ஒருகரம் மோடம் டெலிஃபோன் இணைப்புகள் தாங்கி ’யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்ற முதுமொழி நனவில் காட்டிடும். இத்தனை செயல்களால் வாழ்வில் வளம்தரும் கணினி போற்றுதும் கணினி போற்றுதும்? தட்டெழுதித் தட்டெழுதிக் கையெழுத்தை மறக்கச் செய்யும் மின்னெலியில் விரல்வலிக்கச் சொடுக்கச் செய்யும் பொழுதுகள் மறந்து அறநெறிகள் துறந்து உடல்நலம் பேணுவது அசட்டை செய்து பெரியவர் மனங்களில் வறியவர் ஆகவும் சிறுவர் சிறுமியர் மடிமையர் ஆகவும் இளையோர் நெறிகளில் இளைத்தோர் ஆகவும் தீயோர் செயல்கள் கலியில் பெருகிட மூவா மருந்தாய் விளங்கிப் பல்கிடும் கணினி போற்றுதும் கணினி போற்றுதும்? கரணம் என்பது உபகரணம் ஆகி மனிதன் அவற்றை ஆளும் வரையில் காரணம் ஆகா மனிதன் அழிவுக்கு. பொறிகளின் பொறிகள் மனிதன் மனதில் அல்லதைச் சமைத்து நல்லதை அழித்தால் பொறிகளின் நெருப்பு ஊழித் தீயாகி உலகினை அழிக்க உபாயம் ஆகிவிடும்! *****
09. உண்டு இல்லை எனப் பண்ணுவோம்! ரமணி, 19/08/2012 உண்டு என்பது உண்மை ஆயின் இல்லை என்பது மாயை ஆகும். உண்மை என்பது ஒன்றே யாகில் மாயை என்றது பலவே யாகும். ஒன்றே என்பது உள்ளே உறைவது பலவே என்றது வெளியே தெரிவது. உள்ளே உறைவதைப் புலன்கள் அறியா வெளியே தெரிவதே புலன்கள் அறிவது. புலன்களின் பின்னால் உள்ளது மனமே மனதின் செயல்வகை புத்தியால் சிறக்கும். புத்தியால் ஒடுங்கும் தானெனும் அகந்தை அகந்தை ஒடுங்கினால் ஆத்மா தெரியும். ஆத்மா தெரிந்திட ஞானம் பிறக்கும் ஞானம் நிலைபெற மனமும் வசப்படும். மனம்வசப் பட்டால் புலன்கள் ஒடுங்கி ஒருங்கித் தெரியும் உள்ளே உறைவது. உள்ளே உறைவதன் தரிசனம் கிடைத்தால் பலவகை உலகின் மாயை விலகும். மாயை விலகிட எல்லை இல்லா ஆத்மா ஒன்றே என்பது தெரியும். ஒன்றின் உண்மை தெரியத் தெரிய நான்நீ இவையெனும் பேதங்கள் குறையும். பலவகை பேதங்கள் குறையக் குறைய மனதின் எல்லை வானாய் விரியும். வானாய் விரிய உயிரொளி பெருகும் சச்சிதா னந்த உண்மை விளங்கும்! *****