விவசாயம் ஏன் கொடுமைப்படுத்துகிறது?
விவசாயிகளின் பிரச்சனைகள் யாவும் உணர்வு பூர்வமானவை:
- விளை நிலங்களை எல்லாம் அழித்து வீடு கட்டி விட்டால் சாப்பாடு எங்கிருந்து கிடைக்கும் என்று நமக்குக் கேள்விகள் தோன்றினாலும், ஆண்டு தோறும் விளை நிலங்கள் வேறு பயன்பாட்டுக்கு திருப்பப்படுவது நடந்து கொண்டே இருக்கிறது.
- விவசாயிகளுக்குக் கடன் வசதி கிடைக்க வேண்டும், விளை பொருளுக்குச் சரியான விலை கிடைக்க வேண்டும். அது இல்லாமல் பல விவசாயிகள் கடன் தொல்லைக்கு ஆளாகி தற்கொலைக்குக் கூடத் தள்ளப்படுகின்றனர்
- உணவுப் பொருட்களின் விலை கட்டுக்குள் இருக்க வேண்டும். இல்லை என்றால் பல ஏழைகள் பட்டினி கிடக்க நேரிடும். பட்டினிச் சாவுகள் பெருகி விடும்.
இவ்வளவு தூரம் தேவை/வழங்கல் பற்றிப் படித்து அலசும் பொருளாதாரக் கோட்பாடுகள் என்ன சொல்கின்றன?
- விவசாயப் பொருட்களுக்கு மானியமோ, விவசாயிகளுக்குச் சிறப்பு முறையில் வங்கிக் கடன்களோ, விளை பொருட்களுக்கு விலை ஆதரவோ இல்லாமல் இன்னொரு பக்கம் உணவுப் பொருட்களின் சந்தை விலைக்குக் குறைவாக நியாய விலைக்கடைகளும் இல்லை என்றால் என்ன ஆகி விடும்?
- அரசாங்கமே தேவையில்லை, சந்தைப் பரிமாற்றங்களே எல்லாம் பார்த்துக் கொள்ளும் என்று பொருளாதாரக் கட்டுபாட்டுக் கொள்கைகளை வலுவாக எதிர்க்கும் வலது சாரிகளின் கனவு உலகம் எப்படி இருக்கும்?
விவசாயத்துக்கு மானியங்கள்
இன்றைக்கும் இந்திய மக்கள் தொகையில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் விவசாயத்தை நம்பிப் பிழைக்கிறார்கள். இருபது ஆண்டுகளுக்கு முன்னால், எங்க அப்பாவும் அம்மாவும் சேர்ந்து சம்பாதித்த மாத சம்பளமான நான்காயிரத்துச் சொச்சத்தில் மளிகைப் பொருட்களுக்கான மாதாந்தர செலவு ஆயிரம் ரூபாய்க்கு சற்றே அதிகம். அதாவது வருமானத்தில் நான்கில் ஒரு பங்கு சாப்பாட்டுச் செலவு, மீதி வீடு, படிப்பு, மற்றும் பிற செலவுகள்.
இன்றைக்கு நானும் என் மனைவியும் சேர்ந்து மாதம் ஐம்பதாயிரம் ரூபாய் வீட்டுக்கு சம்பாதித்த நாட்களில் உணவுப் பொருட்களுக்கான செலவு பல மடங்கு அதிகரித்து விட்டிருந்தது. மாதா மாதம் ஐந்தாயிரம் ரூபாய் மளிகை மற்றும் பிற உணவு சார்ந்த செலவில் போனது. ஆனால் மொத்த வருமானத்தில் பத்தில் ஒரு பங்குதான் அது.
ஏன் அப்படி?
தொழில் நுட்பம் வளரும் போது விவசாய விளைச்சல் அதிகரிக்கிறது. ஆனால் உணவுப் பொருட்களின் தேவை நெகிழ்ச்சி மிகக் குறைவு. அரிசி பத்து ரூபாய்க்கு விற்றாலும் குடும்பத்தில் மாதம் இருபது கிலோ அரிசிதான். விலை எட்டு ரூபாய் என்று குறைந்து விட்டால் முப்பது கிலோ வாங்க ஆரம்பிக்கவோ, இருபது கிலோ என்று அதிகமாகி விட்டால் பத்து கிலோ குறைத்துக் கொள்ளவோ மாட்டோம்.
இப்படி பொதுவாக எல்லோரது வருமானமும் அதிகரிக்கும் போது உணவுப் பொருட்களின் தேவை அவ்வளவு அதிகரிப்பதில்லை. இதைச் சரி கட்ட பல விவசாயிகள் விவசாயத்தை விட்டு விட்டு வேறு தொழிலுக்குப் போக வேண்டியிருக்கும். அதே அளவு விவசாயிகள் விவசாயத்தைத் தொடர்ந்தால், எல்லோருக்குமே கிடைக்கும் வருமானம் குறைந்து விடும். அவர்களது வாழ்க்கைத் தரம் பிற தொழில் செய்பவர்களின் வாழ்க்கைத் தரத்தை விட வீழ்ந்து விடும்.
மீதி இருக்கும் விவசாயிகள் சந்தையில் நிர்ணயிக்கப்பட்ட விலைக்கு இடு பொருட்களை வாங்கி விவசாயம் செய்தால் அரிசி விலை கிலோ நாற்பதுக்கு விற்று அவர்கள் எல்லோரையும் போல நல்ல வசதியாக வாழ ஆரம்பிக்கலாம்.
ஆனால் யாருக்கும் அது விருப்பமில்லை. விவசாயத்தையே நம்பி வாழ்ந்து கொண்டிருக்கும் பல்லாயிரக்கணக்கான குடும்பங்கள், கிராமங்கள் தொழில் நுட்பத்துடன் சார்ந்த விளைச்சல் அதிகரிப்புக்கு ஈடு கொடுக்கும் வகையில் தமது வாழ்க்கையை மாற்றிக் கொண்டு விட முடியாது. பசுமைப் புரட்சி என்று மூன்று ஆண்டுகளில் உணவு உற்பத்தி பல மடங்கான போது, விவசாயம் செய்பவர்களில் பெரும்பகுதியினர் விவசாயத்தைக் கைவிட்டு பிற தொழில்களுக்குப் போக வாய்ப்புகளும் விருப்பங்களும் இருந்திருக்க வேண்டும்.
அப்படி இல்லாத நிலைமையில் எல்லோருமே தொடர்ந்து விவசாயத்தில் ஈடுபட, கணக்குப் பார்க்கும் போது கையில் எதுவும் மிஞ்சுவதில்லை. அதனால் ஏழ்மைக்குத் தள்ளப்படும் விவசாயிகளைத் தொடர்ந்து விவசாயம் செய்ய உதவும் வண்ணம் மானிய விலையில் உரம், பூச்சிக் கொல்லி மருந்துகள், குறைந்த வட்டியில் வங்கிக் கடன் என்று கொடுக்க வேண்டியிருக்கும்.
தலைமுறை தலைமுறையாக தாம் வாழ்ந்து வந்த கிராமத்தை விட்டு, பாட்டன் முப்பாட்டன் காலத்திலிருந்தே உழுது வந்திருக்கும் நிலத்தை விட்டு விட்டு வேறு தொழிலுக்கு போக வேண்டும் என்பதை நினைத்துக் கூடப் பார்க்க முடியாத மக்களுக்கு அதைத் தொடர்ந்து செய்ய உதவுவதை அரசியல் கடமையாக அரசுகள் செய்கின்றன. அதனால் பிரச்சனையை தள்ளிப் போட்டு விட்டாலும், ஒரு முடிவு இல்லாத சுழற்சியில் மாட்டிக் கொள்கிறார்கள் விவசாயிகள்.
நீண்ட கால நோக்கில், 'நீங்களாவது நல்ல வேலைக்குப் போங்க', என்று தம் குழந்தைகளை விவசாயத்திலிருந்து திசை திருப்பி விடுவது பெருமளவு நடந்து தேவை உற்பத்தி சமநிலை மாறி பல ஆண்டுகளுக்குப் பிறகு சரி செய்தல் நடக்கிறது. இடைப்பட்ட காலத்தில் வலிகளும், சச்சரவுகளும், அரசு தலையிடுதல்களும் தவிர்க்க முடியாமல் போய் விடுகின்றன.
குறைந்த பட்ச ஆதரவு விலை
எல்லோரும் சேர்ந்து விளைவிக்கும் விளைச்சல் சந்தைக்கு வந்து சேரும் போது விலை அதல பாதாளத்துக்குப் போய் விடுகிறது. அறுவடை முடிந்ததும், உடனேயே காசாக்கி விடுவோம் என்று ஒவ்வொரு விவசாயியும் தனது விளைபொருளை விற்க முயல, வியாபாரிகள் அவர்களது நிலைமையைப் பயன்படுத்தி அடி மாட்டு விலைக்கு வாங்குவதில் வெற்றி பெற்று விடுகிறார்கள். செலவளித்ததை விட குறைவாகக் கிடைத்தாலும், கையில் காசு வருகிறதே என்று விற்றுத் தீர்த்து விடுவார்கள் விவசாயிகள்.
ஒரு இரண்டு மாதம் கழிந்து எல்லாவற்றையும் வாங்கிப் பதுக்கிக் கொண்ட வியாபாரிகள், விலையை உயர்த்தி வெளிச்சந்தையில் விற்க ஆரம்பிப்பார்கள். வாங்குபவர்களுக்கு அந்த விலையில் வாங்கிக் கொள்வதைத் தவிர வேறு வழியில்லை. இடையில் வந்து பணம் முடக்கிய வியாபாரிகளுக்குத்தான் நல்ல அறுவடை. விவசாயி காசு போதாமல் கடனாளியாகி விட ஏழை மக்களுக்கும் சரியான விலையில் சாப்பாடு கிடைப்பதில்லை.
இதை சரி செய்ய அரசு குறைந்த பட்ச ஆதரவு விலை கொடுத்து விளை பொருட்களை வாங்கிக் கொள்கிறது. அறுவடை முடிந்து மூட்டை மூட்டையாக நெல் வந்தாலும், குவின்டாலுக்கு 800 ரூபாய் அல்லது கிலோவுக்கு எட்டு ரூபாய் வீதம் வாங்கி அரசு நிறுவனம் தயாராக இருக்கும் போது, வியாபாரிகள் யாரும் அதை விடக் குறைந்த விலைக்கு விற்கும்படி விவசாயியை நிர்ப்பந்திக்க முடியாது.
அரசு கிடங்குகளில் அப்படி வாங்கிய உணவு தானியங்களை வைத்திருந்து சந்தையில் இயல்பாக வந்து சேரும் அளவு குறைய ஆரம்பிக்கும் போது தமது கையிருப்பை வெளியில் விற்க ஆரம்பிக்க விலை நியாயமான அளவுக்குள்ளேயே இருக்கும்.
இதில் இன்னொரு பக்கம், நியாய விலைக் கடைகள். எட்டு ரூபாய் கொடுத்து வாங்கிய நெல்லை அரிசியாக்கி பதினைந்து ரூபாய்க்கு விற்றால் வாங்கிச் சாப்பிட முடியாத ஏழைகளின் நன்மைக்காக இரண்டு ரூபாய் நியாய விலை விற்பனையும் அரசு செய்கிறது. இரண்டு விலைக்கும் உள்ள வேறுபாடு மானியமாகப் போகிறது.
Regards